Archives: செப்டம்பர் 2021

உங்களுக்குத் தேவையான அனைத்தும்

சாப்பாட்டு அறை மேசையின் மேல் அமர்ந்துகொண்டு என்னைச் சுற்றி நடந்துக்கொண்டிருந்த இன்பமான குழப்பங்களை நோக்கிக்கொண்டிருந்தேன். அத்தைகள், மாமாக்கள், பிள்ளைகள், சகோதர சகோதரிகள், இன்னும் மற்ற உறவினர்கள் எங்களுடைய குடும்பத்தின் கூடுகைக்கு வந்து ஒன்றாக உணவை மகிழ்ச்சியுடன் ருசித்துக்கொண்டிருந்தனர். நானும் அதை ருசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் ஒரு எண்ணம் என் இருதயத்தை பிளந்தது: உங்களுக்கென்று பிள்ளைகள் இல்லாத, சொந்தமாக ஒரு குடும்பம் இல்லாத ஒரே பெண் நீங்கள்தான்.

என்னைப் போல தனிமையாக இருக்கும் பெண்களுக்கு இதேபோலத்தான் எண்ணம் இருக்கிறது. திருமணத்தையும் குழந்தைகளையும் அதிகமாக மதிப்பிடும் ஆசியக் கலாச்சாரமான, என்னுடைய கலாச்சாரத்தில், தனக்கென்று ஒரு குடும்பம் இல்லாத சூழ்நிலை முழுமையடையாத ஒரு உணர்வை ஏற்படுத்தும். நீங்கள் யார் என்பதை வரையறுத்து, உங்களை முழுமையடைய வைக்கும் ஒன்று உங்களிடத்தில் இல்லாதது போல் தோன்றலாம். 

அதனால் தான் கர்த்தர் என் “பங்கு” என்ற சத்தியம் எனக்கு அதிக ஆறுதலைக் கொடுக்கிறது (சங்கீதம் 73:26). இஸ்ரவேல் கோத்திரத்தாருக்கு அவரவருடைய சுதந்திரம் பங்கிடப்பட்டது. ஆனால் லேவி கோத்திரத்தாருக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை; மாறாக, கர்த்தரே அவர்களுக்கு பங்காகவும் சுதந்தரமாகவும் இருப்பதாக வாக்களித்தார் (உபாகமம் 10:9). அவர்கள் அவரிடத்தில் முழு திருப்தியடைந்து அவர்களுடைய எல்லாத் தேவைகளையும் அவர் கொடுப்பார் என்று நம்பினார்கள். 

நம்மில் சிலருக்கு பற்றாக்குறை என்ற உணர்வு குடும்பத்தோடு தொடர்புடையதாக இல்லாதிருக்கலாம். ஒருவேளை நாம் ஒரு நல்ல வேலைக்காக அல்லது உயர் கல்விக்காக முயற்சிக்கலாம். நம்முடைய சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தேவன் நம்முடைய பங்காகத் தழுவிக்கொள்ளலாம். அவர் நம்மை முழுமையடையச் செய்கிறார். அவரிடம் நமக்கு எந்தக் குறையும் இல்லை. 

மகிழ்ச்சியான கற்றல்

இந்தியாவில் மைசூர் என்ற நகரத்தில், புதுப்பிக்கப்பட்ட இரண்டு ரயில் பெட்டிகள் இறுதியில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, பள்ளிகளாக மாற்றப்பட்டிருக்கிறது. உள்ளுர் கல்வியாளர்கள், ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகளை வாங்கவும் அவைகளை மறுவடிவமைக்கவும் தென்மேற்கு ரயில் நிறுவனத்துடன் இணைந்துக் கொண்டனர். இவைகள் பெரிய உலோகப் பெட்டிகளாக இருந்தன. தொழிலாளர்கள் அதில் படிகள், மின்விசிறிகள், விளக்குகள் மற்றும் சாய்வுமேசைகளை அமைக்கும் வரை அது உபயோகமில்லாததாய் இருந்தது. தொழிலாளர்கள் சுவர்களுக்கு வண்ணம் பூசி, உள்ளேயும் வெளியேயும் வண்ண வண்ண சுவரோவியங்களை ஒட்டினர். இப்படிப்பட்ட அற்புதமான உருமாற்றம் செய்யப்பட்டதின் காரணமாகத் தற்போது அறுபது மாணவர்கள் அங்கு வகுப்புகளில் கலந்துக்கொள்ளுகின்றனர்.

“உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர் 12:2), என்ற பவுலின் கட்டளையைப் பின்பற்றும்போது, இன்னும் அதிக அற்புதமான காரியம் ஒன்று நிகழ்கிறது. உலகத்தோடும் அதின் வழிகளோடும் இருக்கும் தொடர்பிலிருந்து துண்டித்துவிட பரிசுத்த ஆவியானவரை நாம் அனுமதிக்கும்போது நம்முடைய வழிகளும், சிந்தனைகளும், மனப்பான்மையும் மாறத் தொடங்குகின்றன. நாம் அதிக அன்புள்ளவர்களாகவும், நம்பிக்கையுள்ளவர்களாகவும், உள்ளான சமாதானத்தினாலே நிரப்பப்பட்டவர்களாயும் இருக்கிறோம் (8:6).

இன்னும் ஏதோ ஒன்று நடக்கிறது. இந்த மறுரூபமாக்கப்படுதல் தொடர்ந்து நடக்கும் செயலாக இருந்தாலும், ரயில் பயணத்தைப் போல அநேக நிறுத்தங்களையும், துவக்கங்களையும் கொண்டிருந்தாலும், இந்தச் செயல்முறை தேவன் நம் வாழ்க்கையில் என்ன விரும்புகிறார் என்று புரிந்துக்கொள்ள உதவுகிறது. நமக்காக தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள உதவுகிறது (12:2). அவருடைய சித்தத்தை அறிவது பிரத்தியேகங்களை உள்ளடக்கியிருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம். ஆனால் அது எப்போதும் நம்மை அவருடைய குணத்தோடும் அவர் இந்த உலகத்தில் செய்யும் கிரியைகளோடும் சீரமைத்துக்கொள்ள வைக்கிறது. 

இந்தியாவில் மறுவடிவமைக்கப்பட்ட பள்ளியின் பெயர் “நாலி காலி” - இதற்கு ஆங்கிலத்தில் “மகிழ்ச்சியான கற்றல்” என்று அர்த்தம். தேவனின் மறுரூபப்படுத்தும் வல்லமை அவருடைய சித்தத்தை அறிவதில் உங்களை எவ்வாறு வழி நடத்துகிறது?

இக்கபோத் விலகிப் போயிற்று

“த லெஜெண்ட் ஆஃப் ஸ்லீப்பி ஹால்லோ” (ஒரு ஆங்கில நாவல்), இதில் கட்ரீனா என்ற அழகான இளம் பெண்ணை திருமணம் செய்ய இக்கபோத் க்ரேன் என்ற பள்ளி ஆசிரியர் நாடுவதைப் பற்றி நூலாசிரியர் கூறுகிறார். குடியேறிய கிராமப்புறப் பகுதிகளை வேட்டையாடும் தலையில்லாத ஒரு குதிரைவீரன் தான் கதையின் திறவுகோல். ஒரு இரவு, குதிரையின் மேல் ஒரு பூதம் போன்ற தோற்றத்தைக் கண்ட இக்கபோத், பயத்தினால் அப்பகுதியை விட்டு ஓடிப்போகிறார். இந்தக் குதிரை வீரன் கட்ரீனாவுக்கு ஒரு போட்டியான முறைமைக்காரன் என்றும் பின்னர் அவன் கட்ரீனாவை திருமணம் செய்துக்கொள்ளுகிறார் என்றும் வாசகர்களுக்கு தெளிவாகத் தெரிகிறது.

இக்கபோத் என்பது முதன்முதலில் வேதத்தில் காணப்பட்ட ஒரு பெயர் மற்றும் ஒரு இருண்ட பின்னணியைக் கொண்டுள்ளது. பெலிஸ்தியரோடு யுத்தம் பண்ணும்போது இஸ்ரவேலர் தேவனுடையப் பெட்டியயைப் போர்க்களத்திற்கு கொண்டு வந்தனர். இது ஒரு தவறான நடவடிக்கை. இஸ்ரவேல் இராணுவம் தோற்கடிக்கப்பட்டு தேவனுடைய பெட்டி சிறைப்பிடிக்கப்பட்டது. பிரதான ஆசாரியரான ஏலியின் குமாரர் ஓப்னி மற்றும் பினகாஸ் கொல்லப்பட்டனர் (1 சாமுவேல் 4:17). ஏலியும் இறந்து விடுகிறார் (வச. 18). கர்ப்பமாயிருந்த பினகாஸின் மனைவி இந்தச் செய்திகளைக் கேட்டபோது, “அவள் குனிந்துப் பிரசவித்தாள். அவள் சாகும்போது “மகிமை இஸ்ரவேலரை விட்டுப் போயிற்று என்று சொல்லி தன் மகனுக்கு இக்கபோத் (மகிமை புறப்பட்டது) என்று பெயரிட்டாள்” (வச. 22).

அதிர்ஷ்டவசமாக, தேவன் ஒரு பெரிய கதையை வெளிப்படுத்துகிறார். அவருடைய மகிமை கடைசியாக இயேசுவிடம் வெளிப்படுத்தப்படும் என்று அவர் தம்முடைய சீஷர்களிடம் “நாம் ஒன்றாயிருக்கிறதைப் போல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் (பிதா) எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்” என்று தம்முடைய சீஷர்களைப் பற்றி கூறினார் (யோவான் 17:22).

இன்றைக்கு தேவனுடையப் பெட்டி எங்கு இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் பரவாயில்லை. இக்கபோத் ஓடிவிட்டது. இயேசுவின் மூலம் தேவன் தம்முடைய மகிமையை நமக்குத் தந்திருக்கிறார். 

வரம்பற்றவர்

நான் அங்கே, பேரங்காடியில், (Shopping Mall) உணவு சாப்பிடும் இடத்தில், உட்கார்ந்திருக்கிறேன். என் உடல் பதட்டமாகவும் என் வயிறு, வேலைகளின் காலக்கெடுவினால் தத்தளித்துக்கொண்டிருந்தது. நான் என் உணவை எடுத்து, சாப்பிட ஆரம்பித்தபோது, என்னைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த வேலைகளைக் குறித்து பதற்றமடைந்துக்கொண்டிருந்தனர். நாம் அனைவருக்கும் எவ்வளவு கட்டுப்பாடு இருக்கிறது, நேரம், ஆற்றல் மற்றும் திறன் இவற்றில் கட்டுப்பாடு, என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

நான், செய்ய வேண்டிய வேலைகள் என்ற புதிய பட்டியலை எழுதி முக்கியமான வேலைகளை முதலில் செய்ய நினைக்கிறேன். ஆனால் அதை எழுத பேனாவைத் திறக்கும்போது வேறொரு எண்ணம் என் மனதில் தோன்றுகிறது: தாங்கள் விரும்பிச் செய்யும் வேலைகளை சிரமமின்றி செய்து முடிக்கும், முடிவில்லாத மற்றும் எல்லையில்லாதவர்களைப் பற்றி நினைக்கிறேன். தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடுக்குகிறவர் நம் ஆண்டவர் (ஏசாயா 40:12) என்று ஏசாயா கூறுகிறார். அவர் நட்சத்திரங்களை பெயர்சொல்லி அழைத்து அவைகளின் பாதைகளை வழிநடத்துகிறவர் (வச. 26), அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார் (வச. 23), தீவுகளை ஒரு அணுவைப் போலவும், தேசங்களை கடலின் ஒரு துளியைப் போலவும் கருதுகிறார் (வச. 15). அவர் கேட்கிறார் “என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?” (வச. 25). “கர்த்தராகிய அநாதி தேவன், இளைப்படைவதுமில்லை, சோர்ந்து போவதுமில்லை” என்று ஏசாயா பதிலளிக்கிறார்” (வச. 28). 

மனஅழுத்தமும், சிரமமும் நமக்கு ஒருபோதும் நல்லதல்ல; ஆனால் இந்த நாளிலே அவைகள் ஒரு வல்லமையான செய்தியை அளிக்கிறது. வரம்பில்லாத ஆண்டவர் என்னைப் போலல்ல; அவர் விரும்புவதை செய்து முடிக்கிறார். நான் என் உணவை முடித்துவிட்டு மீண்டும் ஒருமுறை இடைநிறுத்துகிறேன். அவரை அமைதியோடு தொழுதுகொள்ளுகிறேன். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பொய்களும் உண்மையும்

 

அடால்ஃப் ஹிட்லர், சிறிய பொய்களைவிட பெரிய பொய்கள் சக்திவாய்ந்தவை என்று நம்பினார். மேலும் அவர் தனது கோட்பாட்டை வெற்றிகரமாக பரிசோதித்தார். அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களை ஆதரிப்பதில் திருப்தி அடைவதாகக் கூறினார். அவர் ஆட்சிக்கு வந்ததும், யாரையும் துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்றார். பின்னர், ஊடகங்களை பயன்படுத்தி தன்னை தகப்பனாகவும் ஒழுக்க நெறியாளராகவும் சித்தரித்தார்.

சாத்தான் நம் வாழ்வில் வல்லமை பெற பொய்களைப் பயன்படுத்துகிறான். அனைத்து தருணங்களிலும், அவன் பயம், கோபம் மற்றும் விரக்தியைத் தூண்டுகிறான். ஏனெனில் அவன் “பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய்” இருக்கிறான் (யோவான் 8:44). சாத்தானால் உண்மையைச் சொல்லமுடியாது, ஏனென்றால் இயேசு சொன்னதுபோல், அவனுக்குள் எந்த உண்மையும் இல்லை.

சாத்தானின் பொய்களில் சிலவைகள் இங்கே. முதலில், நமது பிரார்த்தனைகள் முக்கியமில்லை என்பதே. “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும்பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16) என்று வேதம் சொல்லுகிறது. இரண்டாவது பொய், “நாம் சிக்கலில் இருக்கும்போது, அதிலிருந்து வெளியேற வழியே இல்லை” என்பதே. இதுவும் தவறானது. “தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27) என்றும் “சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13) என்றும் வேதம் வாக்களிக்கிறது. மூன்றாவதாக, “தேவன் நம்மை நேசிப்பதில்லை” என்னும் பொய். அது உண்மையல்ல. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள “தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது” (ரோமர் 8:38-39).

தேவனுடைய சத்தியம் பொய்யைவிட சக்தி வாய்ந்தது. இயேசுவின் போதனைக்கு நாம் அவருடைய வல்லமையில் கீழ்ப்படிந்தால், நாம் “சத்தியத்தை அறிவோம்”, பொய்யானதை நிராகரிப்போம். “சத்தியம் நம்மை விடுதலையாக்கும்” (யோவான் 8:31-32). 

 

மகிழ்ச்சியும் ஞானமும்

ஜப்பானில் ஒவ்வொரு வசந்த காலத்திலும் இனிமையான நறுமணப் பூக்கள் நேர்த்தியான வெளிர் மற்றும் துடிப்பான இளஞ்சிவப்புகளால் நிரப்பப்படுகின்றன. இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உணர்வுகளை மகிழ்விக்கிறது. குறுகிய காலம் மட்டுமே இருக்கக்கூடிய அந்த மலர்கள் ஜப்பானியர்களிடம், குறுகிய வாழ்க்கை அனுபவத்தின் மேன்மையை தன் அழகினாலும் வாசனையினாலும் ஏற்படுத்திச் செல்கிறது. திடீரென்று ஏற்படும் மகிழ்ச்சி மாற்றத்தை அவர்கள் “வாழ்வின் நிலையற்ற தன்மை” என்று அழைக்கிறார்கள்.

மனிதர்களாகிய நாம் மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தேடவும் அதில் நீடிக்கவும் விரும்புகிறோம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆயினும்கூட, வாழ்க்கை கஷ்டங்களால் நிரம்பியுள்ளது என்பதன் அர்த்தம், அன்பான தேவன் மீதான நம்பிக்கை என்னும் பூதக்கண்ணாடியின் மூலம் வலி மற்றும் இன்பம் இரண்டையும் பார்க்கும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அவிசுவாசத்துடனோ இருக்கவோ அல்லது வாழ்க்கையைப் பற்றிய யதார்த்தமற்ற பார்வையை நாமே உருவாக்கிக்கொள்ளவோ அவசியமில்லை.

பிரசங்கி புத்தகம் நமக்கு ஒரு பயனுள்ள மாதிரியை வழங்குகிறது. இந்த புத்தகம் சில நேரங்களில் எதிர்மறையான அறிக்கைகளின் பட்டியலாக கருதப்பட்டாலும், “எல்லாம் மாயை” (1:2) என்று எழுதிய அதே சாலெமோன் ராஜா, “வேறொரு நன்மையும் இல்லை” என்று கூறி, வாழ்க்கையில் எளிமையான விஷயங்களில் மகிழ்ச்சியைக் காண வாசகர்களை ஊக்குவிக்கிறார். “புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை” (8:15).

அழகான பருவங்களிலும் கடினமான காலங்களிலும் (3:11-14; 7:13-14), பரலோகப்பார்வையில் எதுவுமே நிரந்தரமானது இல்லை என்பதை அறிந்து, ஞானத்தை அடையவும் தேவனுடைய கிரியைகளை பார்க்கும்படியும் உதவிசெய்யும்படி (வச. 16-17) தேவனிடம் நாம் கேட்கும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. 

 

சரியாய் எதிர்வினையாற்றுங்கள்

கௌரவால் தன் கண்களை நம்ப முடியவில்லை. "அவர்கள் ஏன் இந்த வெள்ளை உடையில் இருக்கும் நல்ல மாமாவை அடிக்கிறார்கள்" என்று எண்ணினான். அவன் இயேசுவைப் போல உடையணிந்த ஒரு நபர் தெருக்களில் ஊர்வலமாகச் செல்வதையும் , போலி இரத்தம் சொட்டச் சொட்டவும், வீரர்களைப் போல உடையணிந்தவர்களால் சாட்டையால் அடிக்கப்படுவதையும் கண்டான். அது ஒரு சபையின் புனித வெள்ளி பவனி. ஆனால் அந்த காட்சி கௌரவுக்கு மிகவும் நிஜமாக இருந்தது. கௌரவ் ஒரு மனநலிவு நோயாளி, மேலும் அவனது நிலை அவனை மிகவும் ஆர்வத்துடனும் இரக்கத்துடனும் இருக்கும்படி செய்தது. அம்மாவின் புடவையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, “அம்மா, தயவு செய்து அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்!” என்று புலம்பியபடியே அவன் இதயம் இரக்கத்தால் நிறைந்தது.

கௌரவரைப் போல இரக்கமுள்ளவர்களாக இருக்க நாம் அழைக்கப்படுகிறோம். சிலருக்கு எளிதில் இரக்கம் உண்டாகலாம் என்றாலும், மற்ற நமக்கோ அதைப் பயிற்சி செய்ய வேண்டும். கொலோசெ சபையினர்க்கு தங்கள் பழைய வாழ்க்கை முறையை "அகற்ற" வலுவாக வலியுறுத்தப்பட்டது. அழுக்காகவும் கந்தையாகவும் இருந்த ஆடையைத் தூக்கி எறிவது போல, கோபம், மூர்க்கம் , பொறாமை, வாயில் பிறக்கலாகாத தூஷணம், வம்பு வார்த்தைகள் (வ.8) ஆகியவற்றைக் கொண்டிருந்த தங்கள் உலகத்துக்குரிய சுபாவத்தைக் களைந்துவிடும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாறாக, இரக்கம், தயவு, மனத்தாழ்மை மற்றும்நீடிய பொறுமை (V.12)ஆகிய நற்பண்புகளை அணிந்துகொள்ள அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர், அவை " இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும்" (சங்கீதம் 145:8). கொண்ட தங்கள் சிருஷ்டிகரைப் பிரதிபலிக்கின்றன.

இரக்கம், கருணை, தாழ்மை மற்றும் தயவு ஆகியவை இன்றைய உலகில் பெரும்பாலும் பலவீனங்களாகக் கருதப்படுகின்றன. ஆனாலும் இதைத்தான் மற்றவர்கள் நம்மில் பார்க்க வேண்டும், அனுபவிக்க வேண்டும் (வ.12). சக பணியாளர்கள், அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான நமது அனுதின உறவுகளில் இந்த குணாதிசயங்களுடன் செயல்படுவது எப்போதும் எளிதானது அல்ல. ஆனால் சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாயினும் நாம் சரியாக எதிர்வினையாற்ற உறுதிகொள்ள வேண்டும், ஏனெனில் இந்த வழிமுறையில்தான் நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை உலகம் அறியும் ரெபேக்கா விஜயன்